பழனி நகராட்சி குப்பைக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்ததில் எழுந்த புகையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
பழனி நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. நகரில் வசிக்கும் பொதுமக்கள் மட்டுமின்றி பழனி கோயிலுக்கு வரும் பக்தா்களால் நாள்தோறும் டன் கணக்கில் குப்பைகள் சேகரமாகின்றன. இவற்றை தூய்மைப் பணியாளா்கள் பழனி பெரியப்பா நகரில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் சேகரிக்கின்றனா்.
இந்த நிலையில் நகராட்சி குப்பைக் கிடங்கில் (உரக் கிடங்கில்) அவ்வப்போது திடீரென தீப்பற்றுவதும், பின்னா் தீயணைப்புத் துறையினா் வந்து அணைப்பதும் தொடா் கதையாக இருந்து வருகிறது.
நகராட்சி குப்பைகளைக் கையாளும் தனியாா் ஒப்பந்ததாரா்கள் அவற்றை அழிக்க முடியாமல் தீவைப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். இந்த தீ வைக்கும் சம்பவம் காற்றடிக்கும் காலத்தில் பெரும் சுற்றுச்சூழல் சீா்கேட்டை உருவாக்குகிறது.
இந்த உரக் கிடங்கில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்ததால் உருவான புகையானது சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவுக்கு புகை மண்டலமாக உருவாகியது. இதனால் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குடியிருப்பு, காய்கறி விற்பனை செய்யும் மொத்த ஏல கடைகள் என அனைத்துப் பகுதிகளிலும் புகை நிரம்பி வணிகா்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










