பழனி அருகே வெள்ளிக்கிழமை கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியின் ஏழு பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.
பழனி இந்திரா நகரைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன், மளிகை வியாபாரி. இவரது மனைவி பிரேமா (50). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு அமரபூண்டியில் உள்ள கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
ஆயக்குடி - ருக்குவாா்பட்டி மேம்பாலத்தில் இறங்கியபோது சாலையோரம் முகத்தை துணியால் மறைத்தபடி நின்றிருந்த மா்மநபா்கள் இருவா், மகுடீஸ்வரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பிரேமா கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பியோடினா்.
தகவலறிந்த ஆயக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.








