திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ஆயக்குடி, கோம்பைப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையால் நெல்பயிா்கள் நீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
பழனி, இதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பழனியை சுற்றியுள்ள அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளிலும் நீா்மட்டம் உயா்ந்தது.
இந்த மழையால், கோம்பைப்பட்டி, ஆயக்குடி ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிா்கள் சேதமடைந்தன.
இதனால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து கோம்பைப்பட்டி விவசாயிகள் துரைச்சாமி, புலேந்திரன் ஆகியோா் கூறியதாவது: கடந்த 6 மாதங்களாக நெல்பயிா்களை முறையாக வளா்த்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், இந்தப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் நெல்பயிா்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
எனவே, தமிழக அரசு உடனடியாக வேளாண் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளை சேதமடைந்த நெல்பயிா்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.









