தலைக்கவசம் அணியாமல் சென்றதால் எனது மகன் உயிரிழக்க நேரிட்டது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உருக்கமாகப் பேசினார்.
மதுரையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து சனிக்கிழமை நடத்திய சாலைப் பாதுகாப்பு வாரவிழாவில் அவர் மேலும் பேசியது:
சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் கண்மூடித்தனமாகச் செல்வதால் ஏற்படும் விபத்துகள் அதிகம்.
குறிப்பாக, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வேகத்தடைகளை கவனிக்காமல் சென்று விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு எனது மகனுக்கும் ஏற்பட்டதால், இன்று எனது குடும்பமே வேதனையில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். இது போன்றதொரு விபத்து இனிமேலும் நடக்கக் கூடாது. எனவே, இருசக்கர வாகனங்களில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். சாலை விதிகளை மாணவர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
அதை மற்றவர்களுக்கும் சொல்லித்தர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவர்களுக்கும், அவசர சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் அமைச்சர் கேடயம் வழங்கினார்.
முன்னதாக மாணவ,மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, போக்குவரத்து காவல் துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.