குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் முழுமையாக இல்லாத காரணத்தால் மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 345 பேருக்கு மின்னணு குடும்ப அட்டை அச்சிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை மாவட்டத்தில் 8 லட்சத்து 74 ஆயிரத்து 796 குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் 7 லட்சத்து 32 ஆயிரத்து 451 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
குடும்பத் தலைவரின் புகைப்படம் இல்லாதது, பிறந்த தேதி, முழுமையான முகவரி இல்லாதது போன்ற காரணங்களால் 1 லட்சத்து 42 ஆயிரத்து 345 அட்டைதாரர்களுக்கு மின்னணு அட்டைகள் அச்சடிக்க முடியவில்லை. இத்தகைய குடும்ப அட்டைதாரர்களின் விவரம், அவர்கள் அளிக்க வேண்டிய ஆவணத்தின் விவரம் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை குடும்ப அட்டைதாரர்களிடம் பெற்று இணையதளத்தில் பதிவு செய்யும் பணியை நவம்பர் 15 ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இதுவரை மின்னணு அட்டை கிடைக்கப் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் தங்களது நியாய விலைக் கடையின் விற்பனையாளரை அணுகி புதிய அட்டை பெறுவதற்கு வழங்க வேண்டிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
நவம்பர் இறுதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு அட்டை வழங்க வேண்டும் என்பதால் பொதுமக்கள் இப்பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.