மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

கட்டிய தொட்டிகளுக்கு தண்ணீர் இல்லை: மேலும் 56 புதிய தொட்டிகள் தேவையா?

மதுரை மாநகராட்சி பகுதியில் ஏற்கெனவே 28 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாடற்றிருக்கும் நிலையில், தற்போது புதிதாக 56 இடங்களில்

Updated On :9 ஏப்ரல் 2018, 1:33 am

மதுரை மாநகராட்சி பகுதியில் ஏற்கெனவே 28 மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் கட்டப்பட்டு பயன்பாடற்றிருக்கும் நிலையில், தற்போது புதிதாக 56 இடங்களில் மேல்நிலைத் தொட்டிகள் கட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது சரியா என, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். 
     மதுரை மாநகராட்சிக்குத் தேவையான குடிநீர் கடந்த 1985 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஆற்றோர குடிநீரேற்று நிலையங்கள் மூலமே பெறப்பட்டு வந்தது. அதன்படி, தச்சம்பத்து, மேலக்கால், கோச்சடை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் ஊற்று அமைக்கப்பட்டு, தினமும் 60 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டது. நீரோட்டம் உள்ள காலங்களில் மட்டுமே இவற்றிலிருந்து நீரைப் பெற முடிந்தது.
     இதனால், மதுரை நகருக்கான குடிநீரை வைகை அணையிலிருந்து நேரடியாகப் பெறும் திட்டங்கள் இரு கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டன. அதனடிப்படையில், கடந்த 1995 ஆம் ஆண்டு உலக வங்கி உதவியுடன் அணையிலிருந்து நேரடியாக குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  இத்திட்டத்தின்படி, மதுரைக்கு 1500 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறுவதென்றும், அதில் 900 மில்லியன் லிட்டர் குழாய் மூலமாகவும், 600 மில்லியன் லிட்டரை ஆற்றில் திறந்துவிட்டு அதை குடிநீரேற்று நிலையங்களில் ஏற்றி விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டது.
     குடிநீரேற்று நிலையத்திலிருந்து மேல்நிலைத் தொட்டிகளில் ஏற்றி, அதை விநியோகிக்க நகரில் 28 இடங்களில் பல கோடி ரூபாய் செலவில் தொட்டிகளும் கட்டப்பட்டன. அதன்படி, மண்டலம் 1 ( மேற்கு) பகுதியில் 7 இடங்களிலும், மண்டலம் 2 (வடக்கு) பகுதியில் 10 இடங்களிலும், மண்டலம் 3 (கிழக்கு) பகுதியில் 5 இடங்களிலும், மண்டலம் 4 (தெற்கு) பகுதியில் 6 இடங்களிலும் என மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. 
     இந்த மேல்நிலைத் தொட்டிகள் ஒவ்வொன்றும்  10 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டர் வரையிலான கொள்ளளவு கொண்டது. இதன்மூலம்  மட்டும் மண்டலம் 1 பகுதிக்கு 132 லட்சம் லிட்டரும், மண்டலம் 2 பகுதிக்கு 97 லட்சம் லிட்டரும், மண்டலம் 3 பகுதிக்கு 81லட்சம் லிட்டரும், மண்டலம் 4 பகுதிக்கு 101 லட்சம் லிட்டரும் என 411 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக, மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 
    கடந்த சில ஆண்டுகளாக, மதுரையில் மேல்நிலைத் தொட்டிகளில் பெரும்பாலும் நீரேற்றி விநியோகிக்கப்படுவதில்லை. குடிநீர் விநியோக பிரிவில் பிட்டர்கள், பொறியாளர்கள் உள்ளிட்டோரின் பற்றாக்குறை மற்றும் தண்ணீர் போதிய அளவுக்கு கிடைக்காதது ஆகியவையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
    மேலும், மதுரை நகரில் பெருகி வரும் மக்கள் தொகையாலும், அதனால் ஏற்படும் வார்டுகளின் விரிவாக்கத்தாலும் குடிநீர் விநியோகத்தில் திட்டமிட்டு செயல்படுவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டன. இதனால், மேல்நிலைத் தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி அதை பகுதி வாரியாகப் பிரித்து விநியோகிக்க முடியவில்லை. எனவே, நேரடியாகவே தெருக்களுக்கு லாரி மூலம் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.    ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள 28 மேல்நிலைத் தொட்டிகளில் ஓரிரு  தொட்டிகளைத் தவிர்த்து, பெரும்பாலான தொட்டிகள் தற்போது பயன்பாடற்று காட்சிப் பொருளாக உள்ளன.    இந்த நிலையில், தற்போது முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தில் 56 புதிய மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மேல்நிலைத் தொட்டிகள் உள்ள செல்லூர், ராஜாஜி பூங்கா போன்ற இடங்களிலும் புதிய தொட்டிகள் கட்டப்போவதாக அறிவித்திருப்பது சரியா? என கேள்வியும்  எழுப்பப்படுகிறது. 
   இது குறித்து மாநகராட்சி பொறியாளர்கள் கூறுகையில், ஏற்கெனவே உள்ள தொட்டிகளை புதிய குடிநீர் திட்டத்துக்கு பயன்படுத்த முடியுமா? என்று ஆய்வு செய்யப்படும். பழைய தொட்டிகளை விட புதிதாகக் கட்டப்படும் தொட்டிகள் மக்களுக்கு முழுமையாகப் பயன்படும் வகையில்  அமைக்கப்படும் என்றனர்.

குடிநீர் விநியோகப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?
குடிநீரானது மேல்நிலைத் தொட்டிகளில் நிரப்பி விநியோகிக்கப்பட்டால், அனைத்துப் பகுதிகளுக்கும் சீராக கிடைக்கும். ஆனால், தொட்டிகளில் ஏற்றாமல் அந்தந்தப் பகுதி மின்மோட்டார் மூலம் குழாய்களில் விநியோகிக்கப்படுவதாலேயே சில மேடான பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்பதை, கடந்த ஆண்டு அப்போதைய மாநகராட்சி ஆணையரும் நேரில் ஆய்வு செய்து கண்டறிந்தார். 
     மதுரையில் 100 வார்டுகள் உள்ள நிலையில் குடிநீர் பிரச்னையை கண்காணிக்கும் பிளம்பர்கள் 20-க்கும் குறைவாகவே உள்ளனர். மேலும், குடிநீர் பிரிவு பொறியாளர் பணியிடமும் காலியாகவே உள்ளது. இதனால், தொட்டிகளில் ஏற்றாமல் நேரடியாகவே நீரை விநியோகிக்கும் நிலை உள்ளது. எனவே, குடிநீர் விநியோகப் பிரிவுக்கு போதிய பணியாளர்களை நியமித்தாலே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்கிறார்கள் முன்னாள் மாநகராட்சிப் பொறியாளர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.