தேசிய இளையோர் கூட்டுறவு அமைப்பு சார்பில், மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடகளப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 5 மாணவியர் உள்பட 7 பேர் தேர்வாகியுள்ளனர்.
விளையாட்டில் சிறந்து விளங்கும் இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து சர்வதேச அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்தும் வகையில், தேசிய இளையோர் கூட்டுறவு அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் சார்பில், மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளானது 11, 14 மற்றும் 15, 17 வயதுக்குள்பட்டோருக்கான 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் ஆண், பெண் என தனிப் பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் தேர்வான 170 பேருக்கான இரண்டாவது தேர்வுப் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை மதுரையில் டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் (ரேஸ்கோர்ஸ்) நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் சந்திரசேகரன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் சோலை எம். ராஜா, இளையபாரத சேவா அறக்கட்டளை கே. குமரேசன், மதுரை மாவட்ட தடகள சங்க செயலர் என்.சிங்கராஜா உள்ளிட்டோர் பங்கேற்று தொடக்கிவைத்தனர்.
போட்டிகளில் பங்கேற்றவர்களில் 5 மாணவியரும், 2 மாணவர்களும் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயிக்கப்பட்ட நேரங்களில் கடந்து சிறப்பிடம் வகித்தனர். இவர்கள் அனைவரும் பிப்ரவரி 16 முதல் 23 ஆம் தேதி வரை அமைப்பின் சார்பில் நடத்தப்படும் இறுதிச்சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
மேலும், போட்டிகளில் பங்கேற்று தூரத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் கடந்ததாக ஒவ்வொரு போட்டியிலும் 12 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முதல் 3 இடங்களுக்கான தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, தேசிய இளையோர் கூட்டுறவு அமைப்பின் தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.