மதுரை அரசு மருத்துவமனையில் ரூ. 7 கோடி மதிப்பில் அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது.
மதுரை அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே இயங்கி வந்த எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியை புதிதாக மாற்றுவதற்கான பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு ரூ.7 கோடி மதிப்பில் அதி நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி கொண்டு வரப்பட்டது. அதை பொருத்தும் பணிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் அதி நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கான திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் அரசு மருத்துவமனை டீன் டி.மருதுபாண்டியன் பங்கேற்று எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி செயல்பாட்டை தொடங்கி வைத்து கூறியது:
அரசு மருத்துவமனையில் தற்போது பொருத்தப்பட்டுள்ள 1.5 டி எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரம் அதி நவீனமானது. மின்சார பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்கக்கூடியது. சப்தம் இல்லாமல் இயங்கக்கூடியது. இதில் அனைத்து ஸ்கேன்களும் மிகத்துல்லியமாக எடுக்க முடியும். இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால் அவசர காலங்களில் தொழில்நுட்பனர்கள் உதவியின்றி டாட் பட்டனை அழுத்தி தானியங்கி மூலம் நோயாளியை ஸ்கேன் செய்ய முடியும்.
இதற்கு முன் இருந்த கருவி மூலம் நாள்தோறும் சுமார் 25 பேருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது நிறுவப்பட்டுள்ள கருவி அதிக வேகத்துடன் இயங்கக் கூடியது என்பதால் நாள்தோறும் 30 முதல் 40 பேருக்கு ஸ்கேன் செய்ய முடியும். தமிழகத்தில் சென்னை அரசு மருத்துவமனைக்கு அடுத்த படியாக மதுரை அரசு மருத்துவமனையில் மட்டுமே இந்த அதிநவீன எம்ஆர்ஐ ஸ்கேன் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் ஸ்கேனுக்கு குறைந்தது ரூ.7500 முதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனையில் ரூ.2500 மட்டுமே வசூலிக்கப்படுகிறது என்றார்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஷீலா ராணி மல்லிகா, துறைத்தலைவர் சுமதி, இருப்பிட மருத்துவ அலுவலர் ஸ்ரீலதா, உதவி இருப்பிட மருத்துவர் காயத்ரி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.