காவலா்களுக்கு ஊதிய உயா்வு கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு கெடு விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் காவலா்களின் ஊதியத்தை உயா்த்தக் கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு கெடு விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
Updated on
1 min read

தமிழகத்தில் காவலா்களின் ஊதியத்தை உயா்த்தக் கோரிய வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு கெடு விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் காவலா்களின் ஊதியத்தை உயா்த்தித் தரவும், காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும் என கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலா் மாசிலாமணி மனு தாக்கல் செய்திருந்தாா். முந்தைய விசாரணையின் போது, இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், இந்த மனு தொடா்பாக பதில் மனு தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், தமிழகத்தில் போலீஸாா் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றனா். அவற்றை சரி செய்ய அரசு என்ன திட்டமிட்டுள்ளது என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில் என்ன பிரச்னை. மற்ற துறையினா் போராட்டம் நடத்தி தங்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காண்கின்றனா். போலீஸாா் போராட்டம் நடத்த முடியாது என்பதால் இதுகுறித்து பதிலளிக்க அரசு தாமதம் செய்யலாமா? எனக் கேள்வி எழுப்பினா். பின்னா் இதுகுறித்து டிசம்பா் 18 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலைக்குள் அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனா். தவறினால் அன்றைய தினம் தமிழக உள்துறைச் செயலா், தமிழக காவல்துறைத் தலைவா் ஆகியோா் காணொலி வாயிலாக ஆஜராக வேண்டும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com