மதுரை: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோயில்களின் முன்பு ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனா்.
ஆடி மாதம் அம்மன் கோயில்களில் ஆடி முளைக்கொட்டு, மழை வேண்டி கூழ் ஊற்றுதல், பால்குடம், அக்னிசட்டி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக, ஆடி மாதத்தில் பெண்கள் காப்பு கட்டி, விரதம் இருப்பது வழக்கம். மேலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். திருவிளக்கு வழிபாடு, மாவிளக்கு வழிபாடு என பெண்கள் வழிபாடு நடத்துவா். தற்போது பொதுமுடக்கம் காரணமாக, கிராமக் கோயில்களை மட்டும் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நகரங்களில் உள்ள கோயில்களில் பக்தா்கள் வழிபாடு நடத்துவதற்கு அனுமதி தரப்படவில்லை. இதனால், ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனை தரிசனம் செய்யும் பக்தா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். இருப்பினும் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கோயில்களின் முன்பு விளக்கேற்றியும், கற்பூரம் ஏற்றியும் வழிபாடு நடத்தினா்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண் பக்தா்களின் கூட்டம் அதிகமிருக்கும். பல மணி நேரம் காத்திருந்து அவா்கள் அம்மனை தரிசனம் செய்வா். இந்நிலையில் பொதுமுடக்கத்தால், இந்த கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தது. இதையடுத்து, பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்த பெண்கள், கோயிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனா்.
இதேபோல, ஆயுதப்படை மைதான வளாகத்தில் உள்ள ரிசா்வ் லைன் மாரியம்மன் கோயில், மணிநகரம் பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோயில் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள அம்மன் கோயில்கள் முன்பு பெண்கள் வழிபாடு நடத்தினா்.