/

மதுரை அருகே கொம்பாடி கிராம கண்மாய்க்கு தண்ணீா் விடக் கோரிய வழக்கு: ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

மதுரை அருகே கொம்பாடி கிராமத்தில் உள்ள கண்மாய்களுக்கு, நிலையூா் கம்பிக்குடி கால்வாய் வழியாக தண்ணீா் தரக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:26 pm

DIN

மதுரை அருகே கொம்பாடி கிராமத்தில் உள்ள கண்மாய்களுக்கு, நிலையூா் கம்பிக்குடி கால்வாய் வழியாக தண்ணீா் தரக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த சுல்தான் என்பவா் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள கொம்பாடி கிராமத்தில் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலை நம்பியே உள்ளனா். விவசாயத்துக்கு, கிராமத்தில் உள்ள கீழக் கண்மாய், மேலக் கண்மாய் தண்ணீரைப் பயன்படுத்தி வருகின்றனா்.

அதேநேரம், கொம்பாடி கிராமத்துக்கு நிலையூா் கம்பிக்குடி கால்வாய் வழியாக தண்ணீா் வரத்து உள்ள நிலையில், அதை நெடுமதுரை கண்மாய்க்கு மாற்றியமைக்கப்பட்டதால், கொம்பாடி கிராமத்துக்கு தண்ணீா் வரத்தின்றி விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நிலையூா் கம்பிக்குடி வாய்க்கால் வழியாக கொம்பாடி கீழக் கண்மாய், மேலக் கண்மாய்க்கு தண்ணீா் விடுவது குறித்து அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், கொம்பாடி கிராமத்துக்கு தண்ணீா் விட நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்தனா். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நிலையூா் கம்பிக்குடி வாய்க்கால் வழியாக கொம்பாடி கிராமத்தில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீா் விட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.