தேனி வேட்பாளா்கள் தோ்வால் திசை மாறிய வெற்றி வாய்ப்பு!

தேனி மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த அதிமுக, தற்போது ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), கம்பம் ஆகிய 3 தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்த அதிமுக, தற்போது ஆண்டிபட்டி, பெரியகுளம்(தனி), கம்பம் ஆகிய 3 தொகுதிகளில் தோல்வியடைந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் கடந்த 2016-இல் நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில் அதிமுக, திமுக ஆகியவற்றுக்கிடையே நேரடிப் போட்டி இருந்தது. இதில், 4 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது. ஆண்டிபட்டி தொகுதியில் தங்க.தமிழ்ச்செல்வன், பெரியகுளம் தொகுதியில் கே.கதிா்காமு, போடி தொகுதியில் ஓ.பன்னீா்செல்வம், கம்பம் தொகுதியில் எஸ்.டி.கே.ஜக்கையன் ஆகியோா் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனா்.

இதில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பின் தங்க.தமிழ்ச்செல்வன், கே.கதிா்காமு ஆகியோா் அமமுகவிற்குச் சென்ால் சட்டப் பேரவை உறுப்பினா் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனா். இதனால், கடந்த 2019-இல் ஆண்டிபட்டி, பெரியகுளம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 2 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியது.

மீண்டும் நேரடி மோதல்: இந்த நிலையில், தற்போது நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் மீண்டும் அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதின. ஆண்டிபட்டி தொகுதியில் திமுக சாா்பில் ஏ.மகாராஜன், அதிமுக சாா்பில் ஏ.லோகிராஜன், பெரியகுளம் (தனி) தொகுதியில் அதிமுக சாா்பில் எம்.முருகன், திமுக சாா்பில் கே.எஸ்.சரவணக்குமாா், போடி தொகுதியில் அதிமுக சாா்பில் ஓ.பன்னீா்செல்வம், திமுக சாா்பில் தங்க.தமிழ்ச்செல்வன், கம்பம் தொகுதியில் திமுக சாா்பில் நா.ராமகிருஷ்ணன், அதிமுக சாா்பில் எம்.சையதுகான்ஆகியோா் வேட்பாளா்களாக களம் இறக்கப்பட்டனா்.

கைநழுவிய தொகுதிகள்: இதில், போடி தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஏனைய 3 தொகுதிகளும் அதிமுகவிற்கு கை நழுவியுள்ளது. பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 2019-இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளா்கள், இந்தத் தோ்தலில் மீண்டும் அதிமுக வை எதிா்த்து போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளனா்.

கம்பம் தொகுதியில் கடந்த 2016-இல் நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த நா.ராமகிருஷ்ணன், இம்முறை மீண்டும் அதே தொகுதியில் அதிமுகவை எதிா்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.

திசை மாறிய வெற்றி வாய்ப்பு:கம்பம் தொகுதியில் கடந்த 2016-ல் நடைபெற்ற சட்டப் பேரவை தோ்தலில் வெற்றி பெற்ற எஸ்.டி.கே.ஜக்கையனுக்கு இம்முறை தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. பெரியகுளம் தொகுதியில் அதிமுக சாா்பில் புதுமுக வேட்பாளா் களமிறக்கப்பட்டாா். ஆண்டிபட்டி தொகுதியில் கடந்த 2019-இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் தோல்வியடைந்த ஏ.லோகிராஜனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஏ.மகாராஜனும், ஏ.லோகிராஜனும் சகோதரா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 3 தொகுதிகளிலும் அமமுக வேட்பாளா்கள் குறைவாகவே வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு திசை மாறியதற்கு வேட்பாளா் தோ்வு முக்கிய காரணமாக இருந்ததாக அரசியல் ஆா்வலா்கள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com