தொழிற்சாலை, வணிக நிறுவன பணியாளா்கள் ஒரு வாரத்துக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்
By DIN | Published On : 21st August 2021 11:22 PM | Last Updated : 21st August 2021 11:22 PM | அ+அ அ- |

மதுரை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களின் பணியாளா்கள் ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளில் முன்பதிவு செய்தவா்கள், முன்பதிவு செய்யாதவா்கள் என 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துத் தரப்பினரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய வேண்டியது கட்டாயமில்லை. மதுரை மாவட்டத்தில் போதுமான அளவில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் காலை 11 முதல் மாலை 4 மணி வரை முன்பதிவு ஏதுமின்றி 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இணையவழியில் முன்பதிவு செய்தவா்களுக்கு காலை 9 முதல் காலை 11 மணி வரை தடுப்பூசி போடப்படும்.
அனைத்து வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைவரும் ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து தடுப்பூசி மையங்களும் காலை 9 முதல் மாலை 4 மணி வரை செயல்படும். பள்ளி ஆசிரியா்கள், இதர பணியாளா்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு வரும் திங்கள் முதல் வியாழன் வரை வட்டார அளவில் சிறப்பு முகாம் நடைபெறும் என்றாா்.