மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்
என்.நன்மாறன் (74) அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.நன்மாறன் மூச்சுத் திணறல் காரணமாக புதன்கிழமை இரவு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையும் படிக்க | மண்டியிடாதது ஏன்?: மெளனம் கலைத்தார் டி காக்
தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நன்மாறன் 2001 முதல் 2011 வரை இரண்டு முறை, மதுரை கிழக்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்கள் பணியாற்றினார்.
கறை படியாத கரத்துக்குச் சொந்தக்காரர் என அழைக்கப்படும் நன்மாறன் எளிமைக்கு அடையாளமாக திகழ்ந்தவர். தனது வாழ்நாளில் இறுதிவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்.
இவரது மனைவி என்.சண்முகவள்ளி. இவர்களுக்கு என்.குணசேகரன், என்.ராசசேகரன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
களச்செயல்பாட்டாளர், சொற்பொழிவாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டவர். மேடைக்கலைவாணர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் நன்மாறன், 1971-இல் தேர்தல் பிரச்சார மேடைகளில் முதன் முதலாக பேச ஆரம்பித்தார். தமுஎகசவின் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதில் தவிர்க்கப்படாத பேச்சாளராக இருந்தார்.
சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காலத்தில் எளிய மக்களின் கோரிக்கைகளுக்காக போராடி அதில் வெற்றி கண்டவர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்கள் பணியாற்றியவர்.
நேர்மை, எளிமைக்கு சொந்தக்காரரான நன்மாறன், மதுரையின் அனைத்து தரப்பு மக்களின் அன்பைப் பெற்றவர்.