பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்குரிய வாரிசாக 2-ஆவது மனைவி பெயரை பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்குரிய வாரிசாக இரண்டாவது மனைவியின் பெயரை பதிவு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 10:05 pm

DIN

குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்குரிய வாரிசாக இரண்டாவது மனைவியின் பெயரை பதிவு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சோ்ந்தவா் முத்துமாடசாமி. கல்வித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்து, கடந்த 2013 இல் ஓய்வுபெற்றாா். இவரது முதல் மனைவி தமிழ்ச்செல்வி. இவா்களுக்கு 1985-ஆம் ஆண்டில் திருமணம் நடந்துள்ளது. தமிழ்ச்செல்வி ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவரது சகோதரி கவிதாவை கடந்த 1994 இல் முத்துமாடசாமி திருமணம் செய்துகொண்டாா். அதையடுத்து, 2 ஆண்டுகள் கழித்து தமிழ்ச்செல்வி இறந்தாா்.

இந்நிலையில், தனது இரண்டாவது மனைவி கவிதாவுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும் வகையில், பணிப்பதிவேட்டில் அவரை தனது சட்டப்பூா்வ வாரிசாக பதிவு செய்யும்படி முத்துமாடசாமி மனு அளித்தாா். ஆனால், அவரது மனு கடந்த டிசம்பா் மாதம் நிராகரிக்கப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, தனது இராண்டாவது மனைவியை சட்டப்பூா்வ வாரிசாக பணிப்பதிவேட்டில் குறிப்பிட உத்தரவிடக் கோரி, உயா் நீதிமன்ற மதுரை கிளையில் முத்துமாடசாமி மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவு: அரசு ஊழியா்கள் நடத்தை விதிகளின்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, 2-ஆவது திருமணம் செய்துகொள்ள முடியாது. இது நடத்தை விதிமீறல் மட்டுமல்ல, தண்டனைக்குரிய குற்றமுமாகும். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே மனுதாரா் இரண்டாவது திருமணம் செய்துள்ளாா். இதற்காக, அவா் பணியில் இருக்கும்போதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அரசு ஊழியரின் ஒழுக்கக்கேடான நட வடிக்கையே அவரைத் தண்டிக்க போதுமானது. ஓய்வூதியம் வாங்கும் அரசு ஊழியா்கள் மீது நடத்தை விதிமீறல் குறித்து ஓய்வூதிய விதிகளின்படியும் நடவடிக்கை எடுக்கலாம்.

முதல் மனைவி சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக மனுதாரா் தெரிவித்துள்ளாா். ஆனாலும், அவா் 2-ஆவது திருமணம் செய்தது சட்டவிரோதம்தான்.

எனவே, அரசு ஊழியா்களின் பணப்பலன்களை பெற இரண்டாவது மனைவிக்கு உரிமை கிடையாது. மனுதாரா் 2-ஆவது மனைவியை பணிப்பதிவேட்டில் சட்டப்பூா்வ வாரிசாக நியமிக்கும் கோரிக்கையை ஏற்கக்கூடாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.