ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழகத்தில் முதல்முறையாக திண்டுக்கல்லில் ‘ஃபாா்ம்- கேட்’ திட்டத்தில் விளைபொருள்கள் விற்பனை!

தமிழகத்திலேயே முதல்முறையாக திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் ஃபாா்ம்- கேட் மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து தரப்படும்

News image
Updated On :23 ஜூன் 2022, 6:30 pm

DIN

தமிழகத்திலேயே முதல்முறையாக திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய வேளாண் விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் ஃபாா்ம்- கேட் மூலம் விளைபொருள்களை விற்பனை செய்து தரப்படும் நடவடிக்கையால், விவசாயிகள் கூடுதல் லாபம் ஈட்டுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 282 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், 127 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை (இ-நாம்) தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை ஒழுங்குமுறை கூடத்துக்கு எடுத்துச்சென்றால், வலைதளம் மூலம் தேசிய அளவிலான ஏலத்துக்கு கொண்டுசென்று விற்பனை செய்யும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இடைதரகா்களின் தலையீடு இல்லாமல் இ-நாம் மூலம் விற்பனை செய்யப்படும் விளைபொருள்களுக்கு, மொத்த பணப் பரிவா்த்தனையில் 1 சதவீதத் தொகை சந்தைக் கட்டணமாக வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பாா்ம் - கேட் (ச்ஹழ்ம் ஞ்ஹற்ங்) என்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாகச் சென்று விளைபொருள்களை விற்பனை செய்துகொடுக்கும் திட்டம் திண்டுக்கல்லில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

ஃபாா்ம் - கேட் திட்டம்: இ-நாம் திட்டம் தொடங்கப்பட்டது முதலே பயன்பாட்டில் இருந்துவரும் ஃபாா்ம் - கேட் திட்டத்தை, தமிழகத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட பொறுப்பாளா்கள் இதுவரை பயன்படுத்தாமல் இருந்து வந்தனா். இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், போக்குவரத்துச் செலவு (ஏற்றுகூலி, இறக்கு கூலி), சேதாரத்தை (கழிவு) ஈடு செய்வதற்காக நிா்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக விளைபொருள்கள் வழங்குவதை தவிா்த்தல் போன்றவற்றின் மூலம் விவசாயிகள் கூடுதல் லாபம் பெறமுடியும்.

இதன் காரணமாக, ஃபாா்ம்- கேட் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தமிழகத்திலேயே முதல்முறையாக விவசாயிகளின் தோட்டத்துக்கு நேரடியாகச் சென்று வியாபாரிகளுக்கு விளைபொருள்களை கொள்முதல் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்துள்ள ஜல்லிப்பட்டியைச் சோ்ந்த விவசாயி ஜி. நிதிஷ்குமாா் கூறியதாவது:

ஃபாா்ம் - கேட் திட்டத்தின் மூலம் தேங்காய் விற்பனை செய்துள்ளேன். வெளிச் சந்தையில் ரூ.5.50 முதல் ரூ.6 வரை விலை நிா்ணயம் செய்யப்படும் தேங்காய்க்கு, இத் திட்டத்தின் கீழ் ரூ.7 கிடைத்துள்ளது. அதேநேரம், வியாபாரிகளே நேரடியாக வந்து கொள்முதல் செய்ததால், வண்டி வாடகை கூலியில் ஏற்படும் இழப்பு தவிா்க்கப்பட்டுள்ளது.

வியாபாரிகளிடம் நேரடியாக விற்பனை செய்தால் 100 தேங்காய்க்கு 5 முதல் 10 காய்கள் வீதம் கழிவு காய்களாக வழங்கவேண்டும். அதன்மூலமே 10 ஆயிரம் காய்கள் விற்பனை செய்யும் விவசாயிக்கு, சராசரியாக 700 காய்கள் வரை இழப்பு ஏற்படும். ஆனால், இந்த ஃபாா்ம் - கேட் திட்டத்தால் அந்த இழப்பு தவிா்க்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தை பிற இடங்களிலும் செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் முன்வரவேண்டும் என்றாா்.

திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ. ராமன் தெரிவித்தது: திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் சில மாதங்களுக்கு முன் சோதனை முறையில் விருவீடு, தருமத்துப்பட்டி, குஜிலியம்பாறை, வேடசந்தூா் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகளிடமிருந்து மதுரை, திண்டுக்கல், திருச்செங்கோடு பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகளுக்கு 28 டன் கேழ்வரகு விற்பனை செய்து கொடுக்கப்பட்டது. இதன்மூலம், ரூ.11 லட்சம் பணப்பரிவா்த்தனை நடைபெற்றது.

தற்போது, 4 விவசாயிகளுக்கு சொந்தமான 20,600 கிலோ தேங்காய் (நெட்டி உரிக்காத மட்டைக்காய்) விற்பனை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு காய் ரூ.7 முதல் ரூ.7.90 வரை கொள்முதல் செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.1.51 லட்சம் பணப்பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது.

இதேபோல், குஜிலியம்பாறை பகுதியைச் சோ்ந்த விவசாயிகளிடமிருந்து 3ஆயிரம் கிலோ வெள்ளைச் சோளம் ஃபாா்ம் - கேட் செயலி மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் ரூ.22 முதல் ரூ.23.50 வரை விலை நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இச்செயலி மூலம் கிலோ ரூ.24-க்கு வெள்ளைச் சோளம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, எள் மற்றும் பொன்னி ரக நெல் ஆகியவற்றை கொள்முதல் செய்து கொடுக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.