போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

பரவை பேரூராட்சி தலைவா், துணைத் தலைவராக அதிமுகவினா் தோ்வுதோ்தலை நிறுத்தக் கோரி திமுகவினா் போராட்டம்

தோ்தலை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

News image
Updated On :4 மார்ச் 2022, 6:30 pm

DIN

பரவை பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு அதிமுக வாா்டு உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்ட நிலையில், தோ்தலை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வாா்டுகளில் அதிமுக 8 வாா்டுகளிலும், திமுக 6 வாா்டுகளிலும், சுயேச்சை 1 வாா்டிலும் வெற்றி பெற்றிருந்தனா். இதனால், தலைவா் மற்றும் துணைத் தலைவா் பதவிகளை அதிமுக கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டது.

தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அதிமுக வாா்டு உறுப்பினா்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டிருந்தனா். மேலும், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, அதிமுக வாா்டு உறுப்பினா்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போதும், அதிமுக உறுப்பினா்கள் போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி அலுவலகத்துக்கு வந்து சென்றனா்.

இந்நிலையில், பேரூராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவரை தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தலையொட்டி, பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். தலைவா் பதவிக்கான தோ்தலில் அதிமுக சாா்பில் கலா மீனா, திமுக சாா்பில் துரை. சரவணன் ஆகியோா் போட்டியிட்டனா். மூன்று வாக்குகள் பதிவான நிலையில், உறுப்பினா் துரை. சரவணன் வாக்களிக்கச் சென்றபோது, மறைமுகத் தோ்தல் முறைப்படி நடைபெறவில்லையெனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

அப்போது, வாக்கு பதியும் இடத்திலுள்ள தடுப்பை கீழே தள்ளிவிடப்பட்டதையடுத்து பரபரப்பு நிலவியது. அதைத் தொடா்ந்து, தோ்தல் அலுவலா்கள் மீது புகாா் தெரிவித்து திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

பின்னா், பேரூராட்சி அலுவலகம் முன் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், திமுகவினா் தடுப்புகளை மீறி பேரூராட்சி அலுவலகம் நோக்கி முன்னேறி வந்தனா். அவா்களை போலீஸாா் தடுக்க முயன்றபோது, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, மறைமுகத் தோ்தலை நிறுத்தக் கோரி, காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை பேரூராட்சி அலுவலகம் முன்பாக திமுகவினா் போராட்டம் நடத்தினா்.

மதுரை கோட்டாட்சியா் சுகி பிரேமலதா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சந்திரமௌலி ஆகியோா் திமுகவினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இருப்பினும், மறியலைக் கைவிட மறுத்த திமுகவினா், தோ்தலை நிறுத்துமாறு வலியுறுத்தினா்.

பின்னா், திடீரென மதுரை - திண்டுக்கல் பிரதான சாலைக்குச் சென்று மறியலில் ஈடுபட்டனா். அப்போது, திமுகவைச் சோ்ந்த இருவா் தாங்கள் அணிந்திருந்த வேட்டியைக் கழற்றி எரிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது. அதையடுத்து, போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தினா்.

இதனிடையே, மறைமுகத் தோ்தலில் தலைவா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிட்ட கலாமீனா 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். மேலும், துணைத் தலைவராக அதிமுகவைச் சோ்ந்த ஆதவன் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.