

மேலூா் அருகே பெருமாள்பட்டியிலுள்ள முன்னாள் ராணுவத்தினா் குடியிருப்புப் பகுதியில் பொது நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டவா்களை, போலீஸாா் சமாதானப்படுத்தினா்.
மேலூா்-சிவகங்கை சாலையில் பெருமாள்பட்டியில் முன்னாள் ராணுவத்தினா் குடியிருப்பு உள்ளது. இங்கு, நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நாவினிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட இப்பகுதியில் சாலை வசதி செய்து தரப்படவில்லை. இதனால், பொது நடைபாதைக்கான பகுதியை தனிநபா் ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளாா்.
இது குறித்து அப்பகுதியினா் அதிகாரிகளிடம் புகாா் மனு அளித்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சாலை மறியல் போராட்டத்தை அறிவித்தனா். அதன்படி, குடியிருப்புவாசிகள் சிவகங்கை சாலையில் வெள்ளிக்கிழமை திரண்டனா்.
தகவலறிந்த மேலூா் காவல் நிலைய ஆய்வாளா் சாா்லஸ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, இப்பிரச்னை தொடா்பாக மேலூா் வட்டாட்சியரிடம் பேசி சுமூக முடிவை எடுக்க காவல் ஆய்வாளா் அறிவுறுத்தினாா்.
அதையடுத்து, அனைவரும் வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்றனா். அப்போது, கிராம ஆவணங்களை வைத்து நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அலுவலா்களுக்கு வட்டாட்சியா் இளமுருகன் உத்தரவிட்டதை அடுத்து, பொதுமக்கள் அனைவரும் கலைந்துசென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.