மகன் இறந்த துக்கத்தில் தந்தை உயிரிழப்பு
By DIN | Published On : 30th June 2022 11:57 PM | Last Updated : 30th June 2022 11:57 PM | அ+அ அ- |

மதுரையில் மகன் தற்கொலை செய்துகொண்ட துக்கத்தில் தந்தையும் மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் கணேசன்(51). இவரது மனைவி சுப்புலட்சுமி (46). இவா்களது ஒரே மகன் சிவானந்த மணி (21). இவா் திருப்பாலை பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தாா். இந்நிலையில் சிவானந்த மணி, காதல் தோல்வியால் சில நாள்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது குடும்பத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிரச்சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிவானந்த மணி சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து அவரது இறுதிச்சடங்கு முடிந்து வீடு திரும்பிய அவரது தந்தை கணேசன் துக்கம் தாளாமல் அழுது புலம்பியுள்ளாா். இந்நிலையில் இரவில் திடீரென கணேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உறவினா்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு கணேசனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுதொடா்பாக கீரைத்துறை போலீஸாா் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.