மதுரை அலங்காநல்லூர் அருகே காட்டு பன்றி வேட்டைக்கு சென்ற இளைஞர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக பலியானார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அப்பகுதியில் இரவு நேர காட்டுப்பன்றி வேட்டைக்கு சென்று வருவது வழக்கம் என கூறப்படுகிறது. நாய்கள் மீது அலாதி பிரியம் கொண்ட மாணிக்கம் 5 நாய்களை வளர்த்து வந்துள்ளார். இவரது வேட்டைக்கு இவரது நாய்களும் துணைக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு கொண்டையம்பட்டி எனும் பகுதியில் இரவு காட்டுப் பன்றி வேட்டைக்கு சென்றுள்ளார்.
அப்போது அப்பகுதியில் உள்ள அசோக்குமார் என்பவருக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்ததாக கூறப்படுகிறது. இரவு வேட்டைக்கு சென்ற போது நாய்கள் அந்த மின்வேலியை கண்டு எஜமானரை காப்பாற்ற நினைத்து மின்வேலியை மிதித்து ஒவ்வொன்றாக துடிதுடித்து இறந்துள்ளன. இதனால் பதறிய எஜமானர் மாணிக்கம் நாய்களை காப்பாற்ற எண்ணி உடனடியாக அங்கு சென்றபோது அவரும் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் இறந்த வாலிபர் மாணிக்கத்தின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தோட்டத்தில் மின்வேலி அமைத்த உரிமையாளரான அசோக் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். எஜமானரை காப்பாற்ற நினைத்து நாய்கள் உயிரை மாய்த்து கொண்ட போதிலும் நாய்களை காப்பாற்ற நினைத்து எஜமானர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.