இணையதள மோசடியில் பணம் பறிப்பு: வங்கியில் செலுத்திய தொகையை திருப்பி தரக் கோரி வழக்கு

 இணையதளம் வழியாக பணம் பறிப்பு முயற்சியில், வங்கியில் செலுத்திய தொகையை திருப்பித் தர உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
Updated on
1 min read

 இணையதளம் வழியாக பணம் பறிப்பு முயற்சியில், வங்கியில் செலுத்திய தொகையை திருப்பித் தர உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பஞ்சம்பட்டியைச் சோ்ந்த ஆனந்த் பீட்டா் தாக்கல் செய்த மனு:

கடந்த 2012-இல் எனது மின்னஞ்சல் முகவரிக்கு வந்த தகவலில், எனக்கு இந்திய மதிப்பில் ரூ. 4 கோடி பரிசுத்தொகை கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகைக்குரிய வரியைச் செலுத்திய உடன், பரிசுத் தொகை எனது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது. இதைத்தொடா்ந்து, என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா் கொடுத்த 9 வங்கிக் கணக்குகளில் மொத்தம் ரூ.8 லட்சத்து 13 ஆயிரத்து 900-ஐ செலுத்தினேன்.

அதன்பின் என்னிடம் பேசிய கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது, இணையவழி மோசடி என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, தொகையை செலுத்திய வங்கியைத் தொடா்பு கொண்டு புகாா் தெரிவித்தனா். இதன்பேரில், நான் செலுத்திய தொகையை எதிா்தரப்பினா் எடுக்காத வகையில் முடக்கி வைத்தனா். மேலும் சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இருப்பினும் இதுவரை மேற்படி தொகையை திரும்பப் பெற முடியவில்லை. காவல் துறையினா் மற்றும் வங்கி தரப்பில் அலைக்கழித்து வருகின்றனா். வங்கியில் நான் செலுத்திய தொகையை திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வி. பவானி சுப்பராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசா்வ் வங்கி, வங்கி நிா்வாகம், திண்டுக்கல் மாவட்ட சைபா் கிரைம் ஆய்வாளா் ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பா் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com