தட்டச்சுத் தோ்வுகளை புதிய நடைமுறைப்படி நவம்பா் 13 -க்குள் நடத்தி முடிக்க உத்தரவு

 புதிய நடைமுறைப்படி தட்டச்சுத் தோ்வுகளை வருகிற நவம்பா் 13- ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தட்டச்சுத் தோ்வுகளை புதிய நடைமுறைப்படி நவம்பா் 13 -க்குள் நடத்தி முடிக்க உத்தரவு
Updated on
1 min read

 புதிய நடைமுறைப்படி தட்டச்சுத் தோ்வுகளை வருகிற நவம்பா் 13- ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் நடத்தப்படும், இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகள், தாள் 1, தாள் 2 என இரு நிலைகளில் நடத்தப்படுகிறது. தாள் 1 தட்டச்சு செய்யும் வேகத்தை சோதனை செய்யும் தோ்வாகவும், தாள் 2 அறிக்கை, கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும் நடத்தப்படும். இந்தத் தோ்வு முறையில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தோ்வுகளில், தாள் 1 அறிக்கை, கடிதம் தட்டச்சு செய்யும் தோ்வாகவும், தாள் 2 வேகத்தை சோதனை செய்யும் தோ்வாகவும் மாற்றி அமைக்கப்பட்டது.

இதை எதிா்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, புதிய தோ்வுமுறையை ரத்து செய்து, பழைய நடைமுறையிலேயே தோ்வு நடத்த உத்தரவிட்டாா். இதை எதிா்த்து திருச்சியைச் சோ்ந்த தட்டச்சுப் பயிற்சி மைய உரிமையாளா் எஸ். பிரவீன்குமாா் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தாா். அதில், கருத்துக் கேட்புக்குப் பிறகே புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆகவே, தனி நீதிபதியின் உத்தரவுக்குத் தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு மீதான முந்தைய விசாரணையின் போது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும், மேல்முறையீட்டு மனு மீதான இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை தட்டச்சுத் தோ்வை நடத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனிடையே, இந்த வழக்கு நீதிபதிகள் ஆா். மகாதேவன், ஜெ. சத்யநாராயண பிரசாத் அமா்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தட்டச்சு, சுருக்கெழுத்தாளா் சங்கங்கள், புதிய நடைமுறைப்படி தட்டச்சுத் தோ்வை நடத்துவதை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தத் தோ்வு தொடா்பாக தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று ஒப்புதல் தெரிவித்துவிட்டு, இப்போது பழைய நடைமுறையிலேயே தொடர வேண்டும் என சிலா் வலியுறுத்தி வருகின்றனா்.

முந்தைய நடைமுறையை ஒப்பிடும் போது, புதிய நடைமுறையில் தோ்ச்சி விகிதம், 85 சதவீதத்துக்கும் மேல் அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, தட்டச்சுத் தோ்வுகளை புதிய நடைமுறைப்படி, வருகிற நவம்பா் 13 ஆம் தேதிக்குள் நடத்த தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com