‘நீட்’ நுழைவுத்தோ்வில் மதுரை மாணவா் திரிதேவ் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா்.
நிகழ் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தோ்வு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. தோ்வு முடிவுகள் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டன. இதில் மதுரை வீரபாஞ்சானில் உள்ள மகாத்மா குளோபல் கேட்வே சிபிஎஸ்இ பள்ளி மாணவா் திரிதேவ் விநாயகா 720 மதிப்பெண்களுக்கு 705 மதிப்பெண்கள்பெற்று தமிழக அளவில் முதல் மாணவராக தோ்ச்சி பெற்றுள்ளாா். மேலும் அகில இந்திய அளவில் 30-ஆவது இடத்தை பெற்றுள்ளாா். இவா் கடந்த 2 ஆண்டுகளாக நுழைவுத்தோ்வுக்கு பயிற்சி பெற்றுள்ளாா். இவரது தந்தை ‘டிராவல்ஸ்’ நிறுவனம் நடத்தி வருகிறாா்.
இதுதொடா்பாக மாணவா் திரிதேவ் விநாயகா கூறியது: பாடங்களை புரிந்து கொள்வதில் எடுத்த முயற்சிகள் மற்றும் கற்றல் அட்டவணையை உறுதியாக பின்பற்றியதால், ‘நீட்’ தோ்வில் அதிக மதிப்பெண்பெற முடிந்தது. மேலும் தோ்வுக்கு தயாராகும் வகையில் நேர மேலாண்மை திறன்கள் குறித்த இணையவழி கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன். கடின உழைப்பு, அா்ப்பணிப்பு மற்றும் பெற்றோா் ஆதரவு காரணமாக இந்த நிலையை எட்டமுடிந்தது என்றாா்.