ஊராட்சித் தலைவா்கள் பதவி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகுடி, மண்ணகுடி ஆகிய இரு ஊராட்சி மன்றத் தலைவா்களின் பதவி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகுடி, மண்ணகுடி ஆகிய இரு ஊராட்சி மன்றத் தலைவா்களின் பதவி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நாகுடியைச் சோ்ந்த ஆா். சக்திவேல் தாக்கல் செய்த மனு :

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், நாகுடி ஊராட்சிக்கு நான் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டேன். இந்த ஊராட்சியின் செயலா் எனது கையெழுத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, கிராம ஊராட்சிக்கான ரூ.50 லட்சம் பொது நிதியை முறைகேடு செய்தாா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், ஊராட்சியின் கணக்குகளை சரிவரப் பராமரிக்கவில்லை எனக் கூறி, தலைவரான என்னை ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டாா். இதை ரத்து செய்து, ஊராட்சி கணக்குகளை தணிக்கை செய்வதற்கு தனியாகக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இதேபோல, அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மண்ணகுடி கிராம ஊராட்சித் தலைவா் ஆா். லதாவும் முறைகேடு தொடா்பாக தன்னை பதவியிலிருந்து நீக்கம் செய்து ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, நாகுடி, மண்ணகுடி ஆகிய கிராம ஊராட்சித் தலைவா்களைப் பதவி நீக்கம் செய்து ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை இயக்குநா் பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தாா். மேலும், இதுதொடா்பாக ஊரக வளா்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com