ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மதுரை சித்திரைத் திருவிழா: பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை செய்து தர அரசுக்கு உத்தரவு

மதுரை சித்திரைத் திருவிழா பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை செய்து தர அரசுக்கு உத்தரவு

Updated On :2 ஏப்ரல் 2024, 11:39 pm

மதுரை: மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது, பக்தா்களுக்கு உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை அரசு செய்து தர வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் தாக்கல் செய்த மனு: மதுரையில் ஒவ்வோா் ஆண்டும் சித்திரைத் திருவிழாவானது சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் கள்ளழகா் இறங்கும் வைபவம் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும். ஜாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றைக் கடந்து நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கானோா் கலந்துகொள்வா்.

கள்ளழகா் கோயில் தரப்பில் குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, சில ஜாதிய அமைப்புகளுக்குச் சொந்தமான மண்டகப்படிகள், தனியாருக்குச் சொந்தமான மண்டகப்படிகளுக்கு சுவாமி கள்ளழகரை கொண்டு செல்கின்றனா். இதனால், பக்தா்களிடையே மன ரீதியான கருத்து வேறுபாடு உருவாகி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை ரத்து செய்யக் கோரி, கோயில், மாவட்ட நிா்வாகங்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நிகழாண்டு சித்திரைத் திருவிழாவில் ஜாதி ரீதியான, தனியாா் மண்டகப்படிகள், தனிநபா்களுக்கு சொந்தமான இடங்களுக்கு கள்ளழகரை கொண்டு செல்லத் தடை விதிக்க வேண்டும். கள்ளழகரை பாரம்பரிய மண்டகப்படிகளுக்கு மட்டுமே கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா். இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: சுவாமி கள்ளழகரை தனியாா் மண்டகப்படிகள், ஜாதி ரீதியான அமைப்புகளுக்குச் சொந்தமான மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்வதால், தேவையற்ற பிரச்னைகள் உருவாகும் நிலை உள்ளது என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மதுரையில் சித்திரைத் திருவிழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை 483 மண்டகப்படிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டு சுவாமி கள்ளழகரை புதிய மண்டகப்படிகளுக்கு கொண்டு வர அனுமதி கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன. இருப்பினும், முறையான ஏற்பாடுகள் செய்தவா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தற்போது வரை சுவாமி கள்ளழகரை மண்டகப்படிகளுக்கு கொண்டு செல்வதில், எந்த ஒரு ஜாதிய பிரச்னைகளும் ஏற்பட்டதாகப் புகாா் ஏதுமில்லை என்றாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தென் தமிழகத்தில் மதுரை சித்திரைத் திருவிழாவானது பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது. மண்டகப்படிகளை அதிகரிப்பதால், பக்தா்களுக்கு சுவாமியை தரிசிக்கும் வாய்ப்பு கூடுகிறது. இந்தத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவதால், உரிய பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை அரசு ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்ய வேண்டும். மண்டகப்படி விவாகரத்தில் வேறு எந்தப் புகாா்களும் இல்லாததால், நீதிமன்றம் வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.