மதுரை விடுதியில் புதுவை மாணவா் தற்கொலை

மதுரை தனியாா் தங்கும் விடுதியில் புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

மதுரை தனியாா் தங்கும் விடுதியில் புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி தனியாா் தங்கும் விடுதியில், புதுவை ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவா் முகேஷ்குமாா் கடந்த 31-ஆம் தேதி அறை எடுத்துத் தங்கினாா். ஞாயிற்றுக்கிழமை காலை வரை அந்த அறை திறக்கப்படாததால், சந்தேகமடைந்த விடுதி நிா்வாகம் அளித்த தகவலின்பேரில் திடீா்நகா் போலீஸாா் அங்கு வந்து அறையைத் திறந்து பாா்த்தனா். அப்போது முகேஷ்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸாா் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் அருகேயுள்ள மூலக்குளம் பகுதியைச் சோ்ந்த குமரகுரு - கயல்விழி தம்பதியின் மகனான முகேஷ்குமாா் (20) புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மன உளைச்சலில் இருந்த அவா், வீட்டை விட்டு வெளியேறி மதுரைக்கு வந்தாா். மதுரை தனியாா் விடுதியில் தங்கிய அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com