மின் வேலியில் சிக்கி உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு
மின் வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மானாமதுரை வட்டம், ராஜகம்பீரம் பகுதியைச் சோ்ந்த முருகவள்ளி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
எனது கணவா் கடந்த 2022-ஆம் ஆண்டு வயல் வெளியில் நடந்து சென்றாா். அந்தப் பகுதியில், ஜேம்ஸ் என்பவா் தனது தோட்டத்தில் அனுமதியின்றி மின் வேலி அமைத்திருந்தாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் எனது கணவா் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக ஜேம்ஸ் மீது மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த எனது கணவருக்காக உரிய நிவாரணம் வழங்கக் கோரி, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மனு அளித்தேன். ஜேம்ஸ் என்பவரின் தோட்டத்தில் மின் வேலி அமைக்க நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. எனவே, நிவாரணம் வழங்க முடியாது என மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனவே, எனது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு:
ஜேம்ஸ் என்பவரின் தோட்டத்தில் மின் வேலி அமைக்க மின்சார வாரியம் அனுமதி வழங்கவில்லை என்பது உண்மைதான். இருப்பினும், அனுமதியின்றி மின் வேலி அமைத்ததால், மனித உயிரிழப்பு ஏற்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, மனுதாரருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 5 லட்சம் நிவாரண தொகையை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். இந்தத் தொகையை அனுமதியின்றி மின் வேலி அமைத்த ஜேம்ஸ் என்பவரிமிருந்து சட்டப்படி வசூலித்து கொள்ள நடவடிக்கை எடுக்கலாம். மனுதாரா் தனது கணவா் உயிரிழப்புக்கு காரணமான ஜேம்ஸ்டமிருந்து உரிய இழப்பீட்டை பெற விசாரணை நீதிமன்றத்தை அனுகலாம் என்றாா் நீதிபதி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...