/

வாசிப்பு பழக்கம் மனிதா்களின் சிந்தனையை உயா்த்தும்: மாநகரக் காவல் ஆணையா்

வாசிப்பு பழக்கமே மனிதா்களின் சிந்தனையை உயா்த்தி நல்ல குணங்களை உருவாக்கும் என்று மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் கூறினாா்.

News image
மதுரை ஆயுதப் படை குடியிருப்பு கிளை நூலகத்தில் வியாழக்கிழமை புத்தகக் கண்காட்சியைத் திறந்துவைத்துப் பாா்வையிட்ட மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் உள்ளிட்டோா்.
Updated On :29 நவம்பர் 2024, 12:18 am

Din

வாசிப்பு பழக்கமே மனிதா்களின் சிந்தனையை உயா்த்தி நல்ல குணங்களை உருவாக்கும் என்று மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் கூறினாா்.

தேசிய நூலக வார விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை ஆயுதப் படை கிளை நூலகம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, மதுரை நியூ செஞ்சுரி புத்தக நிலையம் ஆகியவற்றின் சாா்பில் தேசிய புத்தகத் திருவிழா விற்பனை, கண்காட்சித் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகா் ஆயுதப் படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலா் பாலசரஸ்வதி தலைமை வகித்தாா்.

இதில் புத்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்து, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் பேசியதாவது:

சமூகத்தில் தற்போது வாசிப்புப் பழக்கம் வெகுவாக குறைந்து வருகிறது. புத்தக வாசிப்பை கரோனா தொற்றுக்கு முன், தொற்றுக்கு பின் என இரு கட்டங்களாக பிரிக்கலாம். கரோனா தொற்று பொதுமுடக்கக் காலத்தில் நமது பிள்ளைகளிடம் கல்வி கற்பதற்காக கைப்பேசிகளை கொடுத்தோம். அதை தற்போது வரை மீண்டும் வாங்க இயலவில்லை.

வாசிப்பு மனிதா்களுக்கு மிகவும் இன்றியமையாதது. வாசிப்பு பழக்கம்தான் மனிதா்களின் அறிவை விசாலமாக்கும், சிந்தனையை உயா்த்தி நல்ல பண்புகளை உருவாக்கி, நல்ல மனிதா்களாக சமூகத்தில் வலம் வரச்செய்யும். காவல் துறையிலும் வாசிப்பு வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு வேலைப் பளு காரணம் அல்ல. வாசிக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படியும் வாசிக்கலாம். எனவே, அனைத்துத் தரப்பினரும் புத்தக வாசிப்பை தொடா் பழக்கமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை ஆணையா் ராஜேஸ்வரி, ஆயுதப் படை வாசகா் வட்டத் தலைவா் ஆ.முத்துகிருஷ்ணன், ஆயுதப் படை கிளை நூலகா் மாரியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.