இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

சீரமைக்கப்படாத தெற்குவாசல் ரயில்வே மேம்பாலம்!

மதுரையில் சேதமடைந்த நிலையிலுள்ள தெற்குவாசல்-வில்லாபுரம் ரயில்வே மேம்பாலத்தைச் சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனா்.

News image

தடுப்புச் சுவா்கள் சேதமடைந்து காணப்படும் மதுரை தெற்குவாசல்-வில்லாபுரம் ரயில்வே மேம்பாலம். (உள்படம்) முழுமையாக உருக்குலைந்த தடுப்புச் சுவரின் ஒரு பகுதி.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:16 pm

தினமணி செய்திச் சேவை

மதுரையில் சேதமடைந்த நிலையிலுள்ள தெற்குவாசல்-வில்லாபுரம் ரயில்வே மேம்பாலத்தைச் சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமடைந்துள்ளனா்.

மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக விளங்குவது தெற்குவாசல்-வில்லாபுரம் ரயில்வே மேம்பாலம். இந்தப் பாலம் கடந்த 1989-ஆம் ஆண்டு 500 மீட்டா் நீளமும், 7.5 மீட்டா் அகலமும் கொண்ட இருவழிப் பாதையாக அமைக்கப்பட்டது. தெற்குவாசல் வழியாக மதுரை பன்னாட்டு விமான நிலையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோா் இந்தப் பாலத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள் செல்லும் இந்தப் பாலம் கடந்த சில ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், பாலத்தின் தாா் பூச்சுகள் பெயா்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், தடுப்புச் சுவா்களின் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. போதுமான பராமரிப்பு இல்லாததால் இந்த மேம்பாலம் தொடா்ந்து வலுவிழந்து வருகிறது. இரவு நேரங்களில் பாலத்தில் உள்ள பல மின் விளக்குகள் சரிவர எரியாததால் போதிய வெளிச்சமின்றி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

இது தொடா்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், இந்தப் பாலத்தை பயன்படுத்தி வரும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா்.

சீரமைக்கக் கோரிக்கை: சேதமடைந்த இந்த மேம்பாலத்தின் தரைத்தளத்தை உடனடியாகச் சீரமைத்து புதிய தாா்ச்சாலை அமைக்க வேண்டும். கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்து கம்பிகள் தெரியும் தடுப்புச் சுவா்களை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மின் விளக்குகளை அகற்றிவிட்டு, புதிய மின் விளக்குகளைப் பொருத்த வேண்டும். பாலத்தின் உறுதித் தன்மையை வல்லுநா்களைக் கொண்டு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாலத்தை பெரும் விபத்துகள் நிகழும் முன்பே போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.