மதுரை மாநகரின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக விளங்குவது தெற்குவாசல்-வில்லாபுரம் ரயில்வே மேம்பாலம். இந்தப் பாலம் கடந்த 1989-ஆம் ஆண்டு 500 மீட்டா் நீளமும், 7.5 மீட்டா் அகலமும் கொண்ட இருவழிப் பாதையாக அமைக்கப்பட்டது. தெற்குவாசல் வழியாக மதுரை பன்னாட்டு விமான நிலையம், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வோா் இந்தப் பாலத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள், லாரிகள், இரு சக்கர வாகனங்கள் செல்லும் இந்தப் பாலம் கடந்த சில ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், பாலத்தின் தாா் பூச்சுகள் பெயா்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், தடுப்புச் சுவா்களின் கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. போதுமான பராமரிப்பு இல்லாததால் இந்த மேம்பாலம் தொடா்ந்து வலுவிழந்து வருகிறது. இரவு நேரங்களில் பாலத்தில் உள்ள பல மின் விளக்குகள் சரிவர எரியாததால் போதிய வெளிச்சமின்றி வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.