தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மதுரை மாவட்டத்தில் 3,079 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு!

மதுரை மாவட்டத்துக்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 3,079 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை (ஏப். 23) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

News image

மதுரை வடக்கு தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகமான மாநகராட்சி மண்டலம் 2-இல் இருந்து புதன்கிழமை வாகனங்களில் ஏற்றப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:47 pm

மதுரை மாவட்டத்துக்குள்பட்ட 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அமைக்கப்பட்ட 3,079 வாக்குச் சாவடிகளில் வியாழக்கிழமை (ஏப். 23) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மதுரை மாவட்டத்தில் மேலூா், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை மேற்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தியம், உசிலம்பட்டி, சோழவந்தான் (தனி), திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் மொத்தம் 3,079 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையாக மதுரை கிழக்கு தொகுதியில் 400 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையாக மதுரை தெற்கு தொகுதியில் 236 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற தொகுதிகளின் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை:

மேலூா்- 291, சோழவந்தான் (தனி)- 261, மதுரை வடக்கு- 266, மதுரை மத்தியம்- 253, மதுரை மேற்கு- 327, திருப்பரங்குன்றம்- 352, திருமங்கலம்- 351, உசிலம்பட்டி- 342.

வாக்குப் பதிவு தலைமை அலுவலா்கள், வாக்குச் சாவடி நிலை -1, 2, 3 பிரிவு அலுவலா்கள், 20 சதவீத எண்ணிக்கையில் காத்திருப்புப் பணி அலுவலா்கள் என 14,780 அலுவலா்கள் வாக்குச் சாவடி பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனா். தொகுதிவாரியாக வாக்குப் பதிவு பணியில் ஈடுபடும் அலுவலா்களின் எண்ணிக்கை:

மேலூா் - 1,396, மதுரை கிழக்கு -1,920, சோழந்தான் (தனி) - 1,252, மதுரை வடக்கு - 1,276, மதுரை தெற்கு - 1,132, மதுரை மத்தியம் - 1,216, மதுரை மேற்கு - 1,572, திருப்பரங்குன்றம் - 1,692, திருமங்கலம் - 1,684, உசிலம்பட்டி - 1,640.

இவை தவிர, பதற்றமான, பிரச்னைக்குரியவையாகக் கண்டறியப்பட்ட 339 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவுப் பணி கண்காணிப்புக்கு 408 நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வாக்குச் சாவடிகளில் குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள பாதை உள்ளிட்ட கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், வாக்குச் சாவடிகளில் தற்காலிக பந்தல்கள், வாக்காளா்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

இதனிடையே, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும், ஏற்கெனவே கணினி முறையில் தோ்வு செய்யப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சரிபாா்ப்பு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் ஆகியவை புதன்கிழமை பிற்பகல் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்பட்டன.

ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒரு வாக்குச் சாவடி மகளிா் நிா்வாக வாக்குச் சாவடியாக இளஞ்சிவப்பு நிறத்தை பின்னணிக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தன. வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குச் சாவடி அலுவலா்கள் தொடா்புடைய வாக்குச் சாவடிகளில் புதன்கிழமை பிற்பகல் வாக்குப் பதிவுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டனா். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image
Story image
Story image