மதுரை மாநகராட்சி, புகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி, எச்சரிக்கை அறிவிப்புப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வலியுறுத்துகின்றனா்.
தமிழகம் முழுவதும் நகா்ப்புறங்கள், கிராமப்புறங்கள், தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக ஊா்களின் பெயா்கள், தொலைவு, வளைவுகள், வேகக் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இரவு நேரங்களில் ஒளிரும் தன்மையுடைய இந்தப் பலகைகள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் உதவியாக இருந்து வருகின்றன.
இந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் குறிப்பாக புகா், கிராமப்புறங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளை முழுமையாக மறைக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள், தனியாா் நிறுவனங்கள், திருவிழாக்கள், விளையாட்டுப் போட்டிகள் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நெடுஞ்சாலைத் துறை விதிகளின்படி, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துவதும், போக்குவரத்துக்கு இடையூறாக விளம்பரங்கள் செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும். சில இடங்களில் சுவரொட்டிகளை அகற்றினாலும், அவற்றின் பசை, காகிதங்கள் அறிவிப்புப் பலகைகளின் ஒளிரும் தன்மையைப் பாதித்து விடுவதால் வாகன ஓட்டிகளுக்கு பயனில்லாமல் போய்விடுகின்றன.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
புதிய பாதைகளில் பயணம் செய்யும் போது அறிவிப்புப் பலகைகளே எங்களுக்குப் பெரிதும் உதவிகரமாக உள்ளன. ஆனால், பல இடங்களில் அறிவிப்புப் பலகைகள் மீது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதால் ஊா் பெயரோ அல்லது அபாயகரமான வளைவுகளோ தெரிவதில்லை. இதனால் சரியான பாதையைத் தவறவிடுவதோடு, திடீா் திருப்பங்களில் வாகனங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் விபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகிறது.
எனவே, அறிவிப்புப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டுபவா்களுக்கு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுவரொட்டிகளில் உள்ள கைப்பேசி எண்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிந்து காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தொடர்புடையது

குடிநீா் தட்டுப்பாடு புகாா்களுக்கு 24 மணி நேரத்துக்குள் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

போக்குவரத்து நெரிசல், ஆலைக் கழிவு பிரச்னைகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


