திரைப்படத்தை நம்பி யாரும் அரசியலுக்கு வந்து விட முடியாது என மனித நேய ஜனநாயக மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தெரிவித்தார்.
கட்சியின் ராமநாதபுரம் கிளை அலுவலகத்தை புதன்கிழமை திறந்து வைத்த பின்னர் அவர் மேலும் கூறியது: ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்கள் தான் அதை தீர்மானிக்கும் நீதிமான்கள். திரைப்படத்தை மட்டும் நம்பி யாரும் அரசியலுக்கு வந்து விட முடியாது. தலைவர்களை திரையரங்குகளில் தேடாமல் மக்கள் மன்றத்தில் தான் தேட வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றிக்கு முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஒட்டு மொத்தமாக வாக்களித்ததும் ஒரு காரணம். பா.ஜ.க. அரசு டி.டி.வி.தினகரனுக்கு கொடுத்த நெருக்கடிகளால் தான் அவருக்கு ஆர்.கே.நகர் மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். திமுகவிற்கு ஏற்பட்ட தோல்வி கவலைக்குரியது. அவர்கள் தோல்வி குறித்து மீளாய்வு செய்ய வேண்டும். சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திமுக பலவீனமடைவதை நாங்கள் விரும்பவில்லை. நாம் தமிழர் கட்சியும் மாற்று அரசியலுக்கான நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. நோட்டா பெற்ற வாக்குகளை கூட பா.ஜ.க.வால் பெற முடியவில்லை.இதன் மூலம் தமிழகத்தில் வாக்குவாத சக்திகளுக்கு வேலை இல்லை என்பதையே காட்டுகிறது. தோல்வி குறித்து அதிமுக தலைமையும் மீளாய்வு செய்ய வேண்டும். ராமநாதபுரம் நகராட்சியில் குடிநீர்,சாலை வசதி உள்ளிட்ட மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
பேட்டியின் போது மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜெயினுலாலவுதீன்,மாநில செயலாளர் தாஜூதீன், மாவட்ட செயலாளர் பீர்முகம்மது ஆகியோரும் உடன் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.