தொண்டி அருகே மீனவர்களிடையே கோஷ்டி மோதல்: 5 பேர் காயம்; 68 பேர் மீது வழக்கு
திருவாடானை தாலுகா தொண்டி அருகே சனிக்கிழமை இரவு மீனவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.


திருவாடானை தாலுகா தொண்டி அருகே சனிக்கிழமை இரவு மீனவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக 68 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
தொண்டி அருகே உள்ள புதுக்குடி கடற்கரை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் அரசுப் புறம்போக்கு இடத்தில் ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு மீனவர்களே காரணம் என ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொண்டனர். இதில், புதுக்குடியைச் சேர்ந்த மீனவர் காமாட்சி (50) ஒரு பிரிவாகவும், மீனவர் முனீஸ்வரன் (35) மற்றொரு பிரிவாகவும் அவர்களிடையே சனிக்கிழமை இரவு கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
இதில், இரு கோஷ்டிகளையும் சேர்ந்த காமாட்சி (50), மணிவண்ணன் (25), சண்முகநாதன் (40), நாகராஜ் (35), காளியம்மாள் (40) ஆகிய 5 பேர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காமாட்சி அளித்த புகாரின்பேரில் முனீஸ்வரன் உள்பட 34 பேர் மீதும், சண்முகநாதன் அளித்த புகாரின்பேரில் ராஜேந்திரன் உள்பட 34 பேர் மீதும் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பெண்கள் வட்டாட்சியரிடம் மனு
புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் சனிக்கிழமை மாலை திருவாடானை வட்டாட்சியர் சாந்தியை சந்தித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற காலஅவகாசம் கோரி மனுக்களை அளித்தனர். அப்போது, மீனவ பெண்கள் கூறியதாவது:
எங்களுக்கு ஏ.மணக்குடியில் சுனாமி மறுவாழ்வு திட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் காலம்காலமாக இந்த பகுதியில் குடியிருந்து மீன் பிடி தொழில் செய்து வருகிறோம். திடீரென குடிசைகளை அகற்றச் சொல்வதால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, இதே இடத்தில் குடியிருக்க அனுமதி வழங்க வேண்டும். அல்லது குடிசைகளை அகற்ற கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய வட்டாட்சியர் சாந்தி, அரசால் வழங்கப்பட்ட சுனாமி மறுவாழ்வு திட்ட வீடுகளை பெற்றவர்கள், உடனடியாக அங்கு குடியேற வேண்டும். ஏற்கெனவே பலமுறை அவகாசம் கொடுத்துவிட்ட படியால், கடைசி முறையாக மேலும் இரண்டு நாள்கள் அவகாசம் வழங்கப்படும். அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...