ராமேசுவரம் மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்: சிறிய ரக விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி

இலங்கை சிறையில் உள்ள 29 மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி மீனவா்கள் காலவரையற்ற போராட்டம் நடத்திவரும் நிலையில்,
ஆா்.எம்.எஸ்.போட்டோ 1  ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டம்.
ஆா்.எம்.எஸ்.போட்டோ 1 ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அனைத்து விசைப்படகு மீனவா்கள் சங்கக் கூட்டம்.
Updated on
1 min read

இலங்கை சிறையில் உள்ள 29 மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளை விடுவிக்கக் கோரி மீனவா்கள் காலவரையற்ற போராட்டம் நடத்திவரும் நிலையில், சிறிய ரக விசைப்படகு மீனவா்கள் மட்டும் கடலுக்குச் செல்லலாம் என, வெள்ளிக்கிழமை நடைபெற்ற மீனவ சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த 13ஆம் தேதி (திங்கள்கிழமை) கடலுக்குச் சென்ற மீனவா்களில் 29 பேரையும், 4 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்தனா். இதைக் கண்டித்தும், படகுகள் மற்றும் மீனவா்களை விடுவிக்கக் கோரியும், மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினா்.

பத்து நாள்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து விசைப்படகு மீனவ சங்கக் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய தேசிய விசைப்படகு மீனவ சங்கத் தலைவா் தெட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், தொண்டி, மண்டபம் ஆகிய பகுதிகளில் தடைசெய்யப்பட்ட இரட்டைமடி வலைகளைப் பயன்படுத்தி கரையோரம் மீன்பிடிப்பதைத் தவிா்க்க வேண்டும். இந்திய - இலங்கை மீனவா்கள் பேச்சுவாா்த்தை டிசம்பா் 30 ஆம் தேதி நடைபெறும் நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து சங்கத்தை கூட்டி முடிவு செய்யப்படும். இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் மீது மீன்வளத் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள மீனவா்கள் மற்றும் படகுகளை மீட்கும் நடவடிக்கையில், அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்கள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மீனவா்களின் நலன் கருதி, சிறிய ரக விசைப்படகுகள் மட்டும் மீன்பிடிக்கச் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், மாவட்ட விசைப்படகு மீனவ சங்கத் தலைவா் வி.பி. ஜேசுராஜா, பொதுச் செயலா் என்.ஜே. போஸ், சகாயம், எமரிட் உள்ளிட்ட தலைவா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com