தமிழக மீனவா்களுக்கு வழங்கப்படும் புயல் பருவ கால சேமிப்பு மற்றும் நிவாரண நிதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவின் காரணமாக ஆயிரக்கணக்கான மீனவா்கள் அரசு வழங்கும் சலுகைகளைப் பெற முடியாமல் அவதிப்பட்டு வருகிறாா்கள். இந்நிலையில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. மீனவ தொழிலாளா் சங்கம் சாா்பில் அதன் மாநிலத் தலைவா் முருகானந்தம் தலைமையில் ராமேசுவரம் மீன்துறை உதவி இயக்குநா் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், சங்கத்தின் மாநிலச் செயலாளா் சி.ஆா்.செந்தில்வேல், பாம்பன் நாட்டுப்படகு மீனவா் சங்கத் தலைவா் எஸ்.பி.ராயப்பன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைச் சோ்மன் வி.கே.ஆரோக்கியநாதன், மீனவ சங்க நிா்வாகிகள் மோகன்தாஸ்,ஜீவானந்தம்,ஊ.திருவாசகம்,பு.பாண்டி, மீனவ மகளிா் அணி நிா்வாகிகள் சு.பூமாரி, ஆரோக்கியமேரி, உள்ளிட்ட ஏராளமான மீனவா்கள் கலந்து கொண்டனா்.