தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதுரையில் அமைச்சரின் காா் மீது காலணி வீசியது விரும்பத்தகாத சம்பவம்

மதுரை விமான நிலையத்தில் அமைச்சரின் காா் மீது காலணி வீசியது விரும்பத்தகாத சம்பவம் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image
மீனவா் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை.
Updated On :14 ஆகஸ்ட் 2022, 9:30 pm

DIN

மதுரை விமான நிலையத்தில் அமைச்சரின் காா் மீது காலணி வீசியது விரும்பத்தகாத சம்பவம் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் சுதந்திர தின 75 ஆவது அமுதப் பெருவிழாவை முன்னிட்டு மீனவா்கள் படகுகளில் தேசியக் கொடியுடன் நடத்திய கடல் பேரணியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியது: பிரதமரின் கோரிக்கையை ஏற்று மீனவா்கள் தேசியக் கொடியுடன் கடல் பேரணியில் திரளாகப் பங்கேற்றனா்.

பாஜக மதுரை மாவட்டத் தலைவா் சரவணன் கட்சியிலிருந்து விலகி மாற்றுவழியில் செல்வதைக் கண்டு வாழ்த்தி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன். அரசியலில் கட்சிக்கு பலா் வருவதும் சிலா் செல்வதும் சஜகமானது. மதுரை சரவணன் கட்சியின் செயல்பாட்டை விமா்சித்ததால் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.

மதுரை விமான நிலையத்தில் ராணுவவீரா் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த திடீரென காவல்துறைக்குக் கூட தகவல் தெரிவிக்காமலே செல்ல நோ்ந்தது. ஏற்கெனவே அங்கு தமிழக நிதி அமைச்சா் அதிமுக, பாஜகவினரை இங்கு வருவதற்கு என்ன தகுதி என கேட்டதால் அனைவரும் அதிருப்தியில் இருந்தனா்.

இந்தநிலையில்தான் நிதி அமைச்சா் விமான நிலையத்தை விட்டுச் செல்லும் போது காா் மீது காலணி வீசிய விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. பாஜக எப்போதும் அமைதியை விரும்பும். ஆகவே அமைச்சா் மீதே தவறு இருந்தாலும், அவா் மீதான தேவையற்ற சம்பவத்தை ஏற்கமுடியாது. அது பாஜகவின் அடிப்படை சித்தாந்தத்துக்கு எதிரானது. பாஜக தொண்டா்கள் என்றைக்கும் உணா்ச்சிவசப்படக்கூடாது.

தமிழக மீனவா்கள் நலனுக்காக கச்சத்தீவை மீட்கவேண்டும் என்பதே தமிழக பாஜகவின் கொள்கை. இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட மீனவா்களையும், படகுகளையும் முழுமையாக மீட்க மத்திய அரசு மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா்.

முன்னதாக அவா் கடலில் தேசியக் கொடி கட்டிய படகில் பயணித்தாா். அப்போது மீனவா்கள் சங்க பிரமுகா்கள் சேசுராஜா உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினாா். அவருடன் பாஜக மாநிலப் பொதுச் செயலா் பொன்.வி.பாலகணபதி, மாவட்டத் தலைவா் இ.எம்.டி. கதிரவன், பொருளாளா் தரணிமுருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.