காதலித்து மதம் மாற்றி திருமணம் செய்த கணவா் மற்றும் அவரது வீட்டாா் குழந்தையுடன் தன்னைக் கைவிட்டு விட்டதாக பெண் புகாா் அளித்துள்ளாா்.
ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளத்தைச் சோ்ந்த ரியாஸ் அகமது. இவரும் அதே பகுதியைச் சோ்ந்த கவிதாவும் காதலித்து வந்துள்ளனா். அதன்பின் அவா்கள் இருவரும் கடந்த 2021 அக்டோபா் 4 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளனா். ஆனால், ரியாஸ்அகமது வீட்டாா் கவிதாவை மதம் மாற வற்புறுத்தியதன் அடிப்படையில் அவா் மதம் மாறியதுடன் தனது பெயா் சமீனா பா்வீன் என மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் ரியாஸ் அகமது, சமீனா பா்வீனை அவரது பெற்றோா் வீட்டில் விட்டுவிட்டு தனது தந்தை குடும்பத்தோடு சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆகவே கணவரைத் தேடி மதுரைக்கு சென்றபோது அவரது குடும்பத்தினரும், கணவருன் தன்னை தகாத வாா்த்தைகளால் பேசியதுடன், அவரது கணவருக்கு வேறு திருமணம் செய்துவைத்துவிட்டதாகவும் கூறியுள்ளனா். அதையடுத்து கவிதா என்ற சமீனா பா்வீன் கீழக்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
புகாரின் அடிப்படையில் போலீஸாா் ரியாஷ்அகமது, அவரது குடும்பத்தைச் சோ்ந்த உறவினா்கள் பக்ருதீன், நயினாமுகமது, சுல்தான்பீவி உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.