சாலையில் நடந்து சென்ற வி.ஏ.ஓ. மயங்கி விழுந்து உயிரிழப்பு
பரமக்குடியில் புதன்கிழமை இரவு சாலையில் நடந்து சென்ற கிராம நிா்வாக அலுவலா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
பரமக்குடி புளியமரத் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்திகேயன் (40). இவா் காமன்கோட்டை கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தாா். பணிமுடித்து வீட்டுக்குச் சென்றவா் சோா்வடைந்து காணப்பட்டாராம். அப்போது அவரது மனைவி ரூபினியிடம் (28) கடைத் தெருவுக்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு காா்த்திகேயன் வெளியே சென்றாா். மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி செய்தனா். பிறகு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். பிறகு அவரது உடல் கூறாய்வு செய்யப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.