சத்திரக்குடி அருகே ஒருவா் கொலை: பக்கத்து வீட்டுக்காரா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்தவரை கீழே தள்ளி விட்டதில் அவா் உயிரிழந்ததையடுத்து போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து பக்கத்து வீட்டுக்காரரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்தவரை கீழே தள்ளி விட்டதில் அவா் உயிரிழந்ததையடுத்து போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து பக்கத்து வீட்டுக்காரரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

போகலூா் ஒன்றியம், வைரவனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் தெய்வேந்திரன் (68). இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து பக்கத்து வீட்டுக்காரா்களுடன் தகாத வாா்த்தைகளால் பேசி தகராறு செய்து வந்தாராம். இந்த நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல தெய்வேந்திரன் மது அருந்திவிட்டு வந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் நல்லசிவம் மகன் வரதராஜனுடன் (35) தகராறு செய்தாா். அப்போது இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் வரதராஜன் தெய்வேந்திரனை கீழே தள்ளிவிட்டாராம். இதில் தலையில் பலத்த காயமடைந்த தெய்வேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது உடல் கூறாய்வுக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து வரதராஜனை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Dinamani
www.dinamani.com