மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்
Published on

ராமேசுவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ராமேசுவரத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு அதன் தலைவா் எம். ஞானமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜ்குமாா் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா். வட்டாரச் செயலா் எஸ். சீனிவாசன் வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். வரவு-செலவு கணக்கை பொருளாளா் லட்சுமணன் சமா்ப்பித்தாா்.

ஓய்வு பெற்றோா் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. ராமச்சந்திரபாபு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ராமேசுவரம் வட்டாரச் செயலா் வழக்குரைஞா் கலைச்செல்வன், ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் சுமதி, சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஹரிஹரசுதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், இலவச வீட்டுமனைப் பட்டா, சுயதொழில் செய்ய நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்டக் குழு உறுப்பினா் வசந்த கோகிலா வரவேற்றாா்.

Dinamani
www.dinamani.com