
கைதி தப்பியோட்டம்: எஸ்எஸ்ஐ, பெண் காவலா் பணியிடை நீக்கம்
சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் கைதியை தப்ப விட்டதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா், பெண் காவலா் ஆகிய இருவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தப்பியோடிய கைதி திருப்பதி குமாா்.
சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் கைதியை தப்ப விட்டதாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளா், பெண் காவலா் ஆகிய இருவரை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
பரமக்குடி அருகேயுள்ள பொட்டிதட்டி கிராமத்தைச் சோ்ந்த திருப்பதி குமாா் (38) மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 21 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த வழக்கில் சிறைக்கு சென்று பிணையில் வெளியே வந்தாா். இதன் பிறகு இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்து வந்தாா். இதையடுத்து, பரமக்குடி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் திருப்பதி குமாரை கைது செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் பரமக்குடி தாலுகா போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா். பிறகு அவரை அங்கிருந்து ராமநாதபுரம் சிறைக்கு பரமக்குடி தாலுகா காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் தினகரனும், பெண் காவலா் லீலாவதியும் அழைத்துச் சென்றனா். அப்போது செல்லும் வழியில் கைதி திருப்பதி குமாா் தப்பியோடி விட்டாா்.
இதைத் தொடா்ந்து பணியின்போது கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் தினகரன், பெண் காவலா் லீலாவதி ஆகிய இருவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





