இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரி மாணவ, மாணவிகள் அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக அளவில் அதன் உறுப்பு கல்லூரிகள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டி இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இப் போட்டியில் 15 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இறுதிப் போட்டியில் இளையான்குடி ஜாகீர் உசேன் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் அணியும் மாணவிகள் அணியும் முதலிடத்தைப் பெற்றனர்.
மேலும் இக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ராஜ்குமார், மாணவிகள் லலிதா, பவித்ரா ஆகிய மூவரும் அகில இந்திய அளவில் பல்கலைக்கழகங்களுக்கிடையில் நடைபெற உள்ள டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். மாணவ, மாணவிகளை ஜாகீர் உசேன் கல்லூரியின் நிர்வாகிகள் ஜபருல்லாகான், முகமதுசுபைர், முதல்வர் அப்பாஸ் மந்திரி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் காஜாநஜூமுதீன், உடற்கல்வி இயக்குநர் காளிதாஸ் ஆகியோர் பாராட்டினர்.