இலக்கியச் சிற்பிகள் உருவாகக் களம் அமைத்தவர் இலக்கியவாதி சொ.முருகப்பா என்று சாகித்திய அகாதெமி ஆலோசனைக்குழு உறுப்பினர் பேராசிரியர் சொ.சேதுபதி தெரிவித்தார்.
காரைக்குடி அருகே புதுவயல் சரசுவதி வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாகித்திய அகா தெமி மற்றும் புதுவயல் சரசுவதி சங்கம் ஆகியன சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சொ.முருகப்பா குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: மறக்கப்பட்ட வரலாற்று நாயகர்களின் புகழை நினைவு கூறி வருகிறது சாகித்திய அகாதெமி. பதிப்புத்துறை, இலக்கியத் துறை என தனது பங்களிப்பினால் சமுதாயம் மேம்படச் செய்தவர் சொ.முருகப்பா. அவர் செட்டிநாடு ராஜாராம் மோகன் ராய் என்று அழைக்கப்பட்ட சீர்திருத்தவாதியாவார்.
இந்திய இலக்கியச் சிற்பிகளாகிய மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், கவிமணி தேசிக விநாய கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் போன்றவர்களின் படைப்புகளையெல்லாம் தனது இதழ்களின் வாயிலாக உலகறிச்செய்தவர் அவர். அவரது 125-ஆம் ஆண்டில் இலக்கிய ஆளுமையை உலகறியச் செய்வதுதான் இந்த உரையரங்கத்தின் நோக்கம் என்றார்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் பழ.முத்தப்பன், சொ.முருகப்பாவின் பதிப்புப் பணிகள் என்ற தலைப்பிலும், பேராசிரியர் நா. வள்ளி சொ.முருகப்பாவின் சமுதாயப்பணிகள் என்ற தலைப்பிலும், பேராசிரியர் கரு. முத்தையா சொ.முருகப்பாவின் இதழியல் பணிகள் என்ற தலைப்பிலும், பேராசிரியர் மு.பழனி ராகுலதாசன் சொ.முருகப்பாவின் இலக்கியப் பணிகள் என்ற தலைப்பிலும் பேசினர்.
நிகழ்ச்சியில் மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் தேவநாவே, காரைக்குடி கம்பன் கழகத் துணைத்தலைவர் அரு.வே.மாணிக்கவேலு, பொன்னமராவதி ராமநாதன், முத்தமிழ்ப் பாசறை அறங்காவலர் ராமச்சந்திரன், சொ.வினைதீர்த்தான், எழுத்தாளர்கள் மணிபாரதி, சந்திரகாந்தன், மீனாட்சிசுந்தரம், ரோட்டரி உடையப்பன், நலாந்தா ஜம்புலிங்கம், பள்ளித் தலைமையாசிரியை சிவகாமசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.