சிவகங்கை அருகே புதன்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மாடக்கோட்டையைச் சேர்ந்த சுந்தரராஜ் (67), குமார் மனைவி மணிமுத்து (37), சேவுகன் (35), கணேசன் (50), மாணிக்கம் (45), சரண்(15) உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் சிவகங்கையில் உள்ள சிவன் கோயிலில் நடைபெற்ற திருமண விழாவுக்காக சரக்கு வேனில் புதன்கிழமை சென்றுள்ளனர். திருமண விழா முடிந்த பின்னர் மாடக்கோட்டைக்கு திரும்பியுள்ளனர்.
வாகனத்தை சிவகங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் ஓட்டிச் சென்றுள்ளார். சிவகங்கை-மானாமதுரை சாலையில் சென்று கொண்டிருந்த போது கண்டனி அருகே சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுந்தரராஜ், மணிமுத்து உள்பட 25 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகர் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனைவரையும் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், படுகாயமடைந்த சுந்தரராஜ், மணிமுத்து ஆகிய இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள சேவுகன், கணேசன் உள்ளிட்ட 23 பேர் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







