பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கல்
சிவகங்கை மாவட்டத்தில் மின்சாரம் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியுதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்புவனம் வட்டம், கழுவன்குளம் கிராமத்தில் அண்மையில் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த நவீன், சபரிதரன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையினை தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வழங்கினாா். இதேபோன்று, திருப்புவனம் வட்டம், கழுகோ்கடை கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சாதிக்அலி குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையினை ஆட்சியா் வழங்கினாா். அப்போது, சிவகங்கை மாவட்ட மகளிா் திட்ட அலுவலா் அருள்மணி உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.