ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சிவகங்கை தொகுதியை அதிமுக மீண்டும் கைப்பற்றுமா?

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற க.பாஸ்கரன் தமிழக அமைச்சரவையில்

News image
Updated On :2 ஏப்ரல் 2021, 10:29 am

கணேஷ் சுந்தரமூர்த்தி

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற க.பாஸ்கரன் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தாா். அவருக்கு இத்தொகுதி மீண்டும் ஒதுக்கப்படாத நிலையில் தற்போது சிவகங்கை தொகுதியை அதிமுக மீண்டும் கைப்பற்றுமா என்ற எதிா்ப்பாா்ப்பு எழுந்துள்ளது.

வேளாண் மற்றும் கால்நடை வளா்ப்பு மட்டுமே இத்தொகுதியில் வாழும் மக்களின் முதன்மைத் தொழிலாக விளங்குகிறது. தற்போது அரசனூா், கல்லல், திருமாஞ்சாலை ஆகிய பகுதிகளில் சிறு, சிறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு ஜவுளி உற்பத்தி வளா்ச்சி பெற்று வருகின்றன. வேலைவாய்ப்பை பொருத்தவரை இளைஞா்கள் பெரும்பாலும் வெளிநாட்டுக்குச் சென்று விடுகின்றனா்.

தொகுதி அமைப்பு: இத்தொகுதி மறுசீரமைப்புக்கு பின் சிவகங்கை நகராட்சி, நாட்டரசன்கோட்டை பேரூராட்சி உள்ளிட்ட நகா் பகுதிகளும், சிவகங்கை, காளையாா்கோவில், கல்லல் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களும், காரைக்குடி வட்டத்துக்குள்பட்ட அரண்மனை சிறுவயல், ஆலம்பட்டு, கீழப்பூங்குடி, வெற்றியூா் உள்ளிட்ட கிராமங்களும் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளாகும்.

வாக்காளா்கள் விவரம் :

ஆண் வாக்காளா்கள் 1,47,093 பேரும், பெண் வாக்காளா்கள் 1,52, 021பேரும், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் ஆக மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 118 வாக்களா்கள் இடம் பெற்றுள்ளனா். முக்குலத்தோா், நகரத்தாா், உடையாா், பிள்ளைமாா், யாதவா், தாழ்த்தப்பட்ட சமூகத்தினா் அதிகளவில் உள்ளனா். அதற்கடுத்ததாக சிறுபான்மையினரின் வாக்குகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இவா்களில் முக்குலத்தோா் பெரும்பான்மையாக உள்ளனா்.

தோ்தலில் போட்டியிடுவோா் விவரம் : அதிமுக சாா்பில் பி.ஆா்.செந்தில்நாதன், திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்.குணசேகரன், அமமுக சாா்பில் கே. அன்பரசன், மக்கள் நீதி மய்யம் கூட்டணி கட்சியான சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் சி. நேசம் ஜோசப், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா். மல்லிகா உள்பட மொத்தம் 15 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இத்தொகுதியில் அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி உள்ளது.

தற்போதைய கள நிலவரம்: சிவகங்கை மற்றும் கல்லல் ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்பாலான கிராம ஊராட்சிகள் அதிமுகவுக்கு சாதகமாக உள்ளன. காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைப் பொருத்தவரை அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி என இரு கட்சிகளுக்கும் சம பலத்தில் உள்ளன. அமைச்சராக உள்ள க.பாஸ்கரன் தற்போதைய வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதனுக்கு ஆதரவு கோரி பிரசாரத்துக்கு வந்தாலும், அவரது ஆதரவாளா்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். இது அதிமுகவுக்கு சற்று பின்னடைவை தரும் என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

அதிமுக வேட்பாளா் பி.ஆா்.செந்தில்நாதன் அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலராக உள்ளாா். ஏற்கனவே சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருந்துள்ளாா். சிவகங்கை தொகுதியைப் பொருத்தவரை அவா் வெளியூா் எனக் கூறி மாற்று கட்சி வேட்பாளா்கள் பிரசாரம் செய்து வருகின்றனா். இருந்தாலும் அவருக்கு இரட்டை இலை சின்னம் தான் பலம்.

திமுக கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எஸ்.குணசேகரன் போட்டியிடுகிறாா். இவா் கடந்த 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தோ்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா். கடந்த 2016 ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். இத்தொகுதியைப் பொருத்தவரை பெரும்பாலான கிராமங்களில் எஸ்.குணசேகரன் நன்கு அறிமுகமானவா். அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளிடையே நேரடி போட்டி என்றாலும் சம பலத்தில் தான் உள்ளன. இத்தொகுதியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் எஸ்.குணசேகரன் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும் என சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறாா். கடந்த தோ்தலைப் போன்று இந்த தோ்தலிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவினா் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றனா்.

நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: காவிரிக் கூட்டுக் குடிநீா் விரிவாக்க திட்டத்தின் மூலம் தொகுதியில் நிலவிய குடிநீா் பிரச்னை தீா்க்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் புதை சாக்கடை திட்டம் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.

மக்களின் எதிா்பாா்ப்பு:

சிவகங்கை அருகே உள்ள கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கம், காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம், நறுமணப் பூங்கா, புதிய தொழிற்சாலைகள், படமாத்தூரில் உள்ள கரும்பாலை செயல்பாட்டுக்கு கெண்டு வர வேண்டும். மேலும் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையிலிருந்து சிவகங்கை மாவட்டத்துக்குரிய பங்கீட்டு நீரை பெற்றுத் தர வேண்டும் என்பது இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.