மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கடந்த திங்கள்கிழமை இரவு வைகையாற்றில் மணல் கடத்திய டிராக்டரை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.
மானாமதுரை அருகே செங்கோட்டை காலனியில் உள்ள வைகை ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து மானாமதுரை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் உதயகுமார் மற்றும் காவலர்கள் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு சிலர் டிராக்டரில் ஆற்று மணலை ஏற்றி நிரப்பிக் கொண்டிருந்தனர். காவலர்களைக் கண்டவுடன் அவர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு இருட்டுக்குள் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அதன் பின்னர் காவலர்கள் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அந்த டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து மானாமதுரை காவலர்கள் வழக்குப் பதிந்து தப்பியோடிய மணல் திருடர்களைத் தேடி வருகின்றனர்.