சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்தும் அதனை வாபஸ் பெற வலியுறுத்தியும் மறியல் போராட்டங்கள் நடத்திய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
இதையடுத்து மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் ஒரு சில கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இப்பகுதிகளில், குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயங்கின. கிராமங்களுக்கு அரசு நகர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டன. தனியார் பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதையும் படிக்க- ஐபிஎல் 2021: அதிக ரன்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
மேலும் மானாமதுரையில் ரயில் நிலையம் அருகே புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் எனக் கோரி ரயில் மறியல் செய்ய முயன்ற திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். திருப்புவனத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு மறியல் போராட்டம் நடத்திய திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.