மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் கடந்த திங்கள்கிழமை இரவு ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெற்றது.
இக்கோயிலில் தற்போது ஆடித்தபசு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற திரு ஆடிப்பூர சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் ஆனந்தவல்லி அம்மன் அன்ன வாகனத்தில் வளையல் மாலை, பூமாலைகள் அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
அதன்பின் கும்பம் வைத்து சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. பூர்ணாஹூதி முடிந்து ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. கோயிலுக்குள் திரண்டிருந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆடிப்பூர உற்சவத்தைக் கண்டு தரிசித்தனர். அதன்பின் கோயிலுக்குள் பெண்களுக்கு வளையல்கள் வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று பெண்கள் வளையல்களை பெற்றுக் கொண்டனர்.
ஆடித்தபசு விழாவில் இரண்டாவது நாள் ஏ.எல்.எஸ்.ராமையா நாடார் குமாரர்கள் குடும்பத்தினர் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், நடைபெற்று அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று முடிந்ததும் அம்மன் வீதி உலா புறப்பாடு தொடங்கியது.
இதையும் படிக்க: நாட்டில் ஒரேநாளில் 13,734 பேருக்கு கரோனா
சிவாச்சாரியார்களின் கைலாய வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் ஆனந்தவல்லி அம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் உலா வந்து கோயிலை வந்தடைந்தார். வீதிகளில் மக்கள் ஆனந்தவல்லி அம்மனை வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். இரவில் கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது.