தரம் உயர்த்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
முதல்முறையாக ஒரு வார்டில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று முதல் கணக்கை தொடங்கியுள்ளது. அதிமுக 5 வார்டுகளிலும் சுயேட்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி கண்டுள்ளனர்.
பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட மானாமதுரையில் உருவாக்கப்பட்ட 27 வார்டுகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் சிவகங்கை அரசு மகளிர் கல்லூரியில் எண்ணப்பட்டது.
ஒவ்வொரு சுற்றுக்கும் 3 வார்டுகளை சேர்ந்த வேட்பாளர்கள் அழைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை மதியம் 12 மணிக்கு முடிவடைந்தது.
9 சுற்றுகளாக நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் சுயேச்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 10 வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிமுகம் கண்டது.
இந்த வெற்றியின் மூலம் மானாமதுரை நகராட்சியில் பாரதிய ஜனதா கட்சி முதல் முறையாக தனது கணக்கை தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேர்தல் பார்வையாளர் தங்கவேலு உள்ளிட்டோர் வாக்கு எண்ணும் மையத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வார்டு தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு மானாமதுரை நகராட்சி ஆணையர் கண்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.